Sunday, October 24, 2010

அமெரிக்க தேர்தல் நடைமுறைகள்

அமெரிக்காவின் பல மாகாணங்களில் இப்போது தேர்தல் நடைபெறுகிறது, குறிப்பாக கவர்னர் தேர்தல். இங்குள்ள கவர்னர் பதவி நம் நாட்டின் முதல் அமைச்சர் பதவி போல. நம் நாட்டை போல், சட்டசபை பிரதிநிதி மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு பின்னர் அவர்கள் முதல் அமைச்சரை தேர்ந்து எடுப்பது போல் இல்லாமல் மக்களே நேரடியாக கவர்னரை தேர்ந்து எடுப்பார்கள் இங்கே. 

நம்மூரில் தேர்தல் நடைபெறுகிறது என்றால் எவ்வளவு ஆர்பாட்டம் ஆரவாரம். ஆனால், இங்கே நடக்கும் தேர்தல் முறைகளில் சில எனக்கு பிடித்தது, அதை தான் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


இங்கு தேர்தல் பல கட்டங்களில் நடைபெறுகிறது. முதலில் கட்சியினுள் போட்டி, அதாவது யாரெல்லாம் போட்டியிட விரும்புகிறார்களோ அவர்கள் கட்சியினுள்  போட்டியிடுவார்கள். கட்சியின் உறுப்பினர்கள் அவர்களில் ஒருவரை வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள். இதில் குறிப்பிட வேண்டியது, எல்லா வேட்பாளர்களையும் மேடையேற்றி விவாதம் செய்ய வைப்பார்கள். அவர்கள் தேர்ந்த்தெடுக்கப்பட்டால் என்னென்ன செய்வார்கள், எப்படி செய்வார்கள் என்று விளக்கமாக விவாதம் கொள்ள வேண்டும். விவாதத்திற்கான கேள்விகள் போட்டி வேட்பாளர்களும் கேட்பார்கள், மக்களும் கேட்பார்கள், இல்லை பல கேள்விகளில் இருந்து தேர்ந்த்தெடுக்கப்பட்டவையாகவும் இருக்கலாம். இந்த மாதிரி விவாதம் தேர்தலின் எல்லா கட்டங்களிலும் நடைபெறும். இவ்வாறாக கட்சியினுள் தேர்ந்த்தெடுக்கப்பட்ட ஒருவர் மாற்றுக்கட்சியின் வேட்பாளரோடு போட்டியிடுவார். இன்னொரு விஷயம், இங்கே இரண்டே மாபெரும் கட்சிதான். சிறு சிறு கட்சிகள் உண்டு என்பதை கூகுள் முலம் தான் தெரிந்து கொண்டேன், அப்படி கட்சிகள் இருப்பதே தெரியாத அளவுக்கு இருக்கிறது (நம் ஊரில்!!!).


கட்சியின் வேட்பாளர்கள் தேர்வானதும், மேலே கூறியபடி அவர்களுக்குள் விவாத மேடை நடைபெறும். பல இடங்களில் பலதரப்பட்ட மக்கள் முன்னால் இந்த விவாத மேடை இடம்பெறும். இதன் முலம் ஒவ்வொரு வேட்பாளரின் அறிவு, திறமை, தொலைநோக்க பார்வை போன்ற பல விசயங்களை அறிய வாய்ப்பு கிடைக்கும். இதனால் நடுநிலையான மக்கள் சரியான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க முடியும்.


இங்கே தேர்தல் நடைபெறுகிறது என்பதை பத்திரிகை, ரேடியோ, இணையத்தளம் போன்ற மீடியாக்கள் மூலம் தான் தெரிந்து கொள்ள முடியும். ஒரு வால்போஸ்டர் கிடையாது, வாக்காள பெருங்குடி மக்களே என்று ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் கிடையாது, வேட்பாளர் கூழைக்கும்பிடு போட்ட படி நகர்வலம் வருவது கிடையாது, வீட்டுக்கு வீடு துண்டு சீட்டு விளம்பரம் கிடையாது, இப்படி நம்மூர் தேர்தல் போல் எந்த ஆரவாரம் இன்றி தேர்தல் நடைபெறும். படத்தில் காட்டி இருப்பது போல (அனுமதித்த) சில வீட்டின்  முன்னால் விளம்பர அட்டை ஊன்றபட்டிருக்கும், அவ்வளவு தான். தேர்தல் நடைபெறும் நாளன்று அலுவலகம், பள்ளி, கல்லூரி எல்லாம் வழக்கம் போல் இயங்கும். தேர்தல் நடைபெறுவதை போன்று எந்த அறிகுறியும் தெரியாது.

இதையெல்லாம் பார்க்கும் போது நம்மூரில் இதை போன்ற தேர்தல் நடைமுறைகள் என்று வருமோ என்ற ஏக்கம் தான் வருகிறது. குறிப்பாக எனக்கு இதில் மிகவும் பிடித்தது, விவாத மேடை தான். அதன் மூலம் மக்கள் சரியான வேட்பாளரை அடையலாம் கொள்ள முடியும். இன்றைய காலத்தில், நம்நாட்டில் பணம் படைத்தவர்கள் மட்டும் தான் போட்டியிட முடியும் என்ற நிலை, அவர்களுக்கு எந்த தகுதியும் தேவை இல்லை என்பது மிக வருந்தகூடியது. அடுத்தது, தேர்தல் சமயத்தில் கட்சி விளம்பரங்களை சுவற்றில், சுவரொட்டிகளில் என்று வரைந்து பொது மக்களுக்கு இடையுறு செய்வது, இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

காத்திருப்போம்!! எதிர்பாத்திருப்போம்!! ஒரு நாள் நம்நாட்டிலும் அரசியல் நாகரிகமாக கையாளப்படும் என்று.

Tuesday, October 12, 2010

என் அமெரிக்க பயணம்

அமெரிக்கன் எம்பசி விட்டு வெளில வரும் போது அவ்வளவு சந்தோசம், இன்டர்வியு பண்ணுனவர் சொன்னது காதுல ஒலிச்சிகிட்டே இருந்தது. "I am keeping your passport, and your visa and passport will reach you within a week, All the best". 

அடுத்து மனைவி மற்றும் குழந்தையின் பாஸ்போர்ட் கிடைக்கணும். மனைவி பாஸ்போர்ட் அப்பளை பண்ணி 4 மாசம் ஆச்சு, ஆனா பிரிண்டிங் மிசின் ஒன்னு வேலை செய்யல (திருச்சி பாஸ்போர்ட் ஆபீஸ்), அதனால கொஞ்சம் லேட் ஆகும் அப்படின்னு சொல்லிட்டாங்க. போறதுக்கு முன்னாடி, நான் 3 வாரம் டெல்லி ஆபீஸ் போய் அமெரிக்காவுல செய்ய போற ப்ராஜெக்ட் பத்தி கத்துக்க சொல்லிட்டாங்க. அதுவும் வசதியா போச்சு, அடுத்த வாரத்திலேயே திருச்சி போய் பாஸ்போர்ட் ஆபிஸ்ல கேட்டதுக்கு, ஒரு வாரத்தில மனைவி பாஸ்போர்ட் வந்துரும்னு சொன்னங்க. நல்ல நேரம், அடுத்த ரெண்டு நாள்லேயே வந்திருச்சி. வாங்கிட்டு திரும்ப திருச்சி போய் ஒரே நாள்ல பையன் பாஸ்போர்ட் ரெடி.அடுத்த வாரத்துக்கு எம்பசில டேட்டும் அவங்களுக்கு கிடைச்சிருச்சி. சரி சுருக்க சொன்ன, எல்லாமே நல்ல படியா முடிஞ்சி, திருவனந்தபுரத்தில இருந்து துபாய் வழிய நியூயார்க் டிக்கெட் கிடைச்சாச்சி.

உள்நாட்டுக்குள்ள பல முறை விமான பிரயாணம் செஞ்சாலும், வெளி நாட்டுக்கு முதமுறை பயணம். ராத்திரி முழுக்க தூங்காம, கூட வழி அனுப்ப வந்த சொந்தங்களோட பேசிகிட்டே கழிச்சாச்சி. அவங்க திரும்ப திரும்ப கேட்டது எப்போ வருவ, எவ்வளவு நாள் அங்க இருக்க உத்தேசம். அதுக்கு, நானும், வருசத்துக்கு ஒரு முறை கண்டிப்பா வருவேன். 3 வருஷம் முடிஞ்சதும் திரும்ப வந்து இந்தியாவில தங்கிடுவேணு சொன்னேன். (இப்போ 2 வருசத்துக்கு ஒரு முறை போறேன், கிரீன் கார்டு வாங்கிரணும்னு இருக்கேன் :-), 4 வருஷம் ஆச்சு ).

பிளைட்டுல ஏறி துபாய் வந்தாச்சு, நான் பண்ணுன தப்பு, கை பெட்டிய பக்கத்தில வைக்காம, ஒரு நாலஞ்சு சீட் தள்ளி  வச்சிட்டேன். அதனால கடைசியா இறங்கவேண்டியதா போச்சு. பிளட்டுல இருந்து ஏர்போட்டுக்கு போற பஸ்ல நானும் விமான ஊழியர்கள் மட்டும் தான். கடைசியா வந்ததால ஒரே ஓட்டம் தான், அடுத்த நியூயார்க் பிளைட்டு பிடிக்க. இது தான் கடைசி அழைப்பு உடனே வாங்கன்னு சொல்லிகிட்டே இருக்காங்க, ஒரு வழிய போராடி வந்து உக்காந்து நியூயார்க் வந்தாச்சு.

இங்க தான் பெரிய காமெடி, நான் கம்பெனி செலவில 2 - 3 முறை உள்நாட்டுல பிரயாணம் செஞ்சிருக்கேன்.ஏர்போர்ட்ட விட்டு வெளில வந்தா என் பேர எழுதின போர்ட்ட கையில வச்சிக்கிட்டு டிரைவர் நிப்பாங்க. அது மாதிரி நினைச்சி நான் வந்துட்டேன். இந்தியாவில எங்க கம்பெனி டிராவல் டெஸ்க்லேயும், எப்படி ஏர்போர்ட்டுல இருந்து போகணும்னு சொல்ல மறந்துட்டாங்க. நான் வெளில வந்து பாக்குறேன், என்னை கூட்டிகிட்டு போக யாரும் வரல. கொஞ்ச நேரம் தேடிகிட்டு, சரி நண்பர் ஒருத்தர கூப்பிடலாம்னு நம்பர தேடினா கிடைக்கல. அப்புறம் தான் தெரிஞ்சது, எல்லார் காண்டாக்ட் நம்பர் எழுதி வச்ச பேப்பரை இந்தியாவில வச்சிட்டு வந்துட்டேன்னு . புது பர்சுல எல்லாம் மாத்தினதுல அந்த லிஸ்ட் விட்டு போச்சு. இன்னோர் லிஸ்ட் சேப்டிக்காக சூட்கேஸ்ல இருந்தது ஞாபகத்துக்க வர, சூட்கேச திறக்கலாம்னு போனா, அது நம்பர் லாக், எப்படியோ நம்பர் மாறி போச்சு. அதையும் திறக்க முடியல, ஒன்னரை வயசு மகன் பிரயாண களைப்புல அழ, வீட்டம்மா, உங்களுக்கு பொறுப்பே கிடையாது அப்படின்னு ஒரு பக்கம் திட்ட. அப்புறம் நல்ல வேலை அண்ணன் கிட்டயும் அந்த லிஸ்ட கொடுத்து வச்சிருந்ததால, இந்தியாவுக்கு போன் பண்ணி, அவர்கிட்ட இருந்து நண்பரோட நம்பர் வாங்கி, அவருக்கு போன் பண்ணி, நண்பர்  கம்பெனிக்கு போன் பண்ணி, ஒரு வழியா டாக்சி டிரைவர் நம்பர் கிடைச்சுது. இதல்லாம் செய்யறதுக்கு நாலு மணி நேரம் ஆச்சு, அதுக்குள்ள டிரைவர் திரும்ப நியூஜெர்சி பக்கம் போய்ட்டாரு. நான் போன் பண்ணினா அவரும் கொஞ்சம் அவர் டென்சனை  எம்மேல இறக்காம் இறக்கி வச்சாரு. 40 நிமிஷம் ஆகும் அங்கேயே வெயிட் பண்ணுங்க வந்திறேன்னாரு. ஒரு வழியா அவர் வந்து, வண்டில ஏறி உக்காந்தா சில நிமிசத்திலேயே நாங்க மூணு பேரும் தூங்கிட்டோம். நியூயார்க் எப்படி இருந்ததுன்னு கூட தெரியாது, ஒன்னரை மணி நேரம் கழிச்சி டிரைவர் எழுப்பும் போது  இறங்கும் ஓட்டல் வந்திருச்சி. நான் போன் பண்ணினா நண்பர் கையில் இட்லி பார்செல்லோடு  வரவேற்றார்.

இன்று நியூயார்க்கை நினைச்சாலும் அந்த கசப்பான அனுபவம் தான் நினைவுக்கு வரும்.

Saturday, October 9, 2010

என் வெளிநாட்டு கனவு

சராசரி சாப்ட்வேர் இன்ஜினியர்களின் கனவு போல நானும் சிறிது காலமாவது வெளிநாட்டில் சென்று வேலை பார்க்க வேண்டும் என்ற கனவில் இருந்தேன். பெங்களூரில் என் கம்பெனி என்னை வேறு கம்பெனிக்கு தாரை வார்த்து (Client location) கொடுத்திருந்தார்கள். எனது மேலாளர் ஒரு முறை சந்திக்க வந்த போது நான் வேலை மாற்றல் வேண்டும் என்றேன், அதுவும் வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்பு வேண்டும் என்று கேட்டேன். அதற்கு நக்கலாக பங்களாதேஷும் வெளிநாடுதான் அங்கே போறியா என்று கேட்டு சிரித்துவிட்டு சென்று விட்டார். நானும் விதியே என்று தொடர்ந்து பணியாற்றி கொண்டு இருந்தேன். ஒரு நாள் எங்கள் கம்பெனி விசா டெஸ்க்கில் இருந்து ஒரு மின்னஞ்சல். இந்த டாக்குமென்ட் எல்லாம் வேண்டும் உங்கள் H1 விசாவுக்காக என்றிருந்தது. எனக்கு ஆச்சரியம், சந்தோசம் அதே சமயம் குழப்பம் கூட, உடனே 3 நாட்களுக்குள் எல்லா டாக்குமெண்டோடு என் கம்பெனிக்கு சென்று விட்டேன். ஆர்வத்தோடு எப்போ எனக்கு விசா கிடைக்கும் என்று கேட்க, அந்த அம்மா ஏற இறங்க பார்த்து விட்டு, இது பெரிய ப்ராசெஸ், சில மாதங்கள் ஆகும் என்றார். கூடுதல் தகவலாக, கிட்டதட்ட மூவாயிரம் (அப்போது) பேர் பணி புரியும் எங்கள் கம்பெனியில், 20 பேரை தேர்வு செய்துள்ளார்கள் அதில் நானும் ஒருத்தன் என்றார். எனது மேலாளர் (அக்கௌன்ட் மேனேஜர்) கீழே பணிபுரியும் 80 பேரில் 2 பேர் தேர்வு, அதில் நான் ஒருத்தன். மிக மகிழ்ச்சியோடு அங்கிருந்தே அவரை தொலை பேசியில் தொடர்பு கொண்டு என் நன்றியை தெரிவித்தேன். (அவர் வேறு ஊரில் உள்ள அலுவலகத்தில் உள்ளார்).

அதன் பின்னர், 2-3 மாதங்கள் ஆகியும் ஒரு தகவலும் இல்லை, நான் பெங்களூரில் இருக்கும் என் கம்பெனியை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, எங்களிடம் அதை பற்றி எந்த தகவலும் இல்லை, நீங்கள் பொறுமையோடு இருக்க வேண்டும் என்றார்கள். பின்னர் என் நச்சரிப்பை தாங்காமல் அவர்கள் பொறுமை இழந்து எனக்கு, பதில் மின்னஞ்சல் அனுப்புவதை நிறுத்தி விட்டார்கள். நானும் அது அவ்வளவு தான், இனி வராது என்று முடிவே செய்துவிட்டேன். இதற்கு நடுவில் நான் பெங்களூரில் ஒரு வீடு (Flat) வாங்கி அங்கே குடியமர்ந்துவிட்டேன். சொந்த வீடு என்பதால் எல்லாம் புது பர்னிச்சர்கள் வாங்கி செட்டில் ஆகி விட்டேன்.

இரண்டு மாதங்களுக்கு பிறகு, எதிர்பாராத ஒரு நாள், என் விசா அப்ளிக்கேசன் ஏற்று கொள்ளப்பட்டது என்று தகவல் வந்தது. அதுவரை என் குடும்பத்தில் யாருக்கும் இதை பற்றி தெரியாது. நான் இதை தெரிவித்ததும் எல்லாருக்கும் மிகவும் மகிழ்ச்சி . ஆனால் தாய் பாசம் இதை விரும்புமா? என் தாயாருக்கு மகிழ்ச்சி என்றாலும் நான் வெகு தூரம் சென்று விடுவேன் என்ற கவலை (இன்றும் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி, எப்போ வருவாய் என்று, மூன்று மாதம் முன்னர் தானே வந்தேன் என்றால், சரி அடுத்து எப்போ வருவாய் என்று கேக்குறேன் என்பார்கள்).

விசா ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற உடன், கம்பெனியின் வேறு ஒரு பிரிவில் இருந்து தொடர்பு கொண்டார்கள். நீங்கள் உடனே எங்கள் பிரிவில் சேர முடியுமா, எங்கள் ப்ராஜெக்ட்க்கு உடனே ஆள் தேவை என்று? எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்றேன். அதற்கு வேற வகையில் என்னை ஒத்துகொள்ள வைத்தார்கள். அதாவது விசா approved மட்டும் தான், இன்னும் ஸ்டாம்பிங் பாக்கி உள்ளது. அதற்கு நான் செல்ல வேண்டும் என்றால் நான் ஏதாவது ப்ரொஜெக்டில் செலக்ட் ஆகி இருக்க வேண்டும் என்றார்கள். நான் விசாரித்ததில் ப்ராஜெக்ட் கிடைப்பது மிக கடினம் அதனால் உடனே ஒத்துக்கொள் என்றார்கள் சில நண்பர்கள். ஆதலால் நான் ஒத்துக்கொண்டேன், பின்னர் லோக்கல் மற்றும் ஆன்சைட் நேர்முகதேர்வுகள், எல்லாம் நல்ல படியாக முடிந்து தேர்வு செய்யப்பட்டேன்.

முதலில் அவர்கள் கொடுத்த அவகாசம், விசா ஸ்டம்பிங் ஆனதும், ஒரு வாரத்தில் செல்ல வேண்டும் என்று. ஆனால், என் நல்ல நேரம் உடனே ஸ்டம்பிங் செய்ய தூதரகத்தில் தேதி கிடைக்க வில்லை. பின்னர் எல்லாம் நல்ல படியாக முடிந்து ஒரு மாதத்தில் அமெரிக்காவுக்கு பயணமானேன். இந்த நவம்பர் 2010 வந்தால் 4 வருடம் முடிந்து விடும், இதில் இருமுறை இந்திய விஜயம் செய்து விட்டேன்.

அடுத்து என் முதல் வெளிநாட்டு பயண அனுபவத்தை பற்றி இங்கே பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன்.

நன்றி, நீங்கள் இதை பொறுமையாக வாசித்தமைக்கு, மீண்டும் வருக.